பழமையான மாதா சிலை உடைப்பு பொதுமக்கள் சாலைமறியல்; 5½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கன்னியாகுமரி அருகே பழமையான மாதா சிலை உடைக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 5½ மணி நேரம் சாலைமறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-27 23:00 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம், ‘சன்செட் பாயிண்ட்‘ கடற்கரையையொட்டி ஒரு பாறையில் சிந்தாதுறை மாதா குருசடி உள்ளது. இந்த குருசடியில் அமைந்துள்ள மாதா சிலை 100 ஆண்டு பழமை வாய்ந்தது ஆகும்.

நேற்றுமுன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் குருசடியில் உள்ள மாதாசிலையின் தலை பகுதியை உடைத்து கீழே வீசியுள்ளனர். நேற்று காலையில் கடற்கரைக்கு சென்ற சில மீனவர்கள் மாதா சிலை உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தகவல் கோவளம் கிராமம் முழுவதும் காட்டு தீ போன்று பரவியது. இதனால் ஆத்திரமடைந்த கோவளம் மீனவர்கள் காலை 8.30 மணியளவில் கோவளம் -கன்னியாகுமரி சாலையில் அமர்ந்து, அந்த வழியாக வந்த 3 அரசு பஸ்கள், ஒரு தனியார் பள்ளி பஸ் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்த கார்கள், வேன்கள் ஆகியவற்றை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயம் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு வந்த மாணவர்களும் பொதுமக்களுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், அங்கு இருந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள சிமெண்ட் இருக்கைகளை உடைத்து சாலையில் வைத்து போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினார்கள். மேலும், ஊருக்குள் செல்லும் குறுக்குச்சாலைகளிலும் போக்குவரத்து நடைபெறாத வகையில் உபயோகப்படுத்தாத மின் கம்பங்களை போட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமான சூழ்நிலையும் உருவானது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துப்பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் ஜெயசந்திரன், தங்கராஜ், செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும், பதற்றத்தை தணிக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் நாகர்கோவில் கோட்டாட்சியர் ஜானகி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ஆறுமுக நயினார், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்டேன்லி ஜோன்ஸ் ஆகியோரும் வந்தனர். கோட்டாட்சியர் ஜானகி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உடைந்த மாதா சிலையை சீரமைத்து தருவதாகவும், சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மதியம் 2 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் 5½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாதா சிலை உடைக்கப்பட்டது குறித்து கோவளம் பங்கு பேரவை துணைத்தலைவர் பயஸ் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்