ராயக்கோட்டை அருகே காட்டில் தூக்கில் வாலிபர் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை

ராயக்கோட்டை அருகே காட்டில், தூக்கில் வாலிபர் பிணம் தொங்கியது. அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-09-05 22:15 GMT
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ளது கொத்தப்பள்ளி. இதன் அருகில் உள்ள சானமாவு காப்புக்காட்டில் ஒரு ஆலமரத்தில் வாலிபர் பிணம் தூக்கில் தொங்கியது. அவருக்கு 25 வயது இருக்கும் என தெரிகிறது.

அவர் இறந்து 20 நாட்களுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. சிவப்பு நிற முழுக்கை சட்டையும், பச்சை நிற கால்சட்டை மற்றும் பனியன் அணிந்திருந்தார்.

அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி சானமாவு கிராம நிர்வாக அலுவலர் மகபூப்ஜான் உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்