மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ.12 ஆயிரம் மதுபாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

மன்னார்குடி அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-09-06 22:15 GMT
சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடையில் மன்னார்குடியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரும், விற்பனையாளரும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

மறுநாள் காலை கடை ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கடைக்குள் சென்று பார்த்தனர். அப்போது கடையில் இருந்த மதுபாட்டில்களை காணவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த பரவாக்கோட்டை போலீசார், மதுக்கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 60 மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மதுக்கடையின் மேற்பார்வையாளர் அசோக்குமார் பரவாக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்