இளைஞர்களுக்காக பெண்களை கடத்துவதாக கூறிய பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

இளைஞர்களுக்காக அவர்களின் காதலை ஏற்க மறுக்கும் பெண்களை கடத்துவதாக கூறிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதமுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2018-09-06 23:49 GMT
மும்பை,

பா.ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம்  நீக்கப்பட்டு உள்ளார்.

மும்பை காட்கோபரில் நடந்த உறியடி நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம், உங்கள் காதலை ஏற்க மறுக்கும் பெண்களை உங்களுக்காக கடத்தி வருவேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்காக தனது செல்போன் நம்பரை குறித்து வைத்து கொள்ளுங்கள் என்று கூறி நம்பரையும் கொடுத்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித் தனர்.

பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, ராம்கதம் எம்.எல்.ஏ. தனது கருத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.

ஆனாலும் அவருக்கு எதிராக நேற்று 2-வது நாளாக மும்பை உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தன.

இந்தநிலையில், ராம் கதமின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு 8 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மாநில மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதேபோல சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விளக்கம் அளிக்குமாறு ராம் கதம் எம்.எல்.ஏ.வுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.

இந்தநிலையில், ராம் கதம் வகித்து வந்த பா.ஜனதாவின் மாநில செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார்.

பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷாவுடன் கலந்து பேசி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் ராம் கதமை அவர் சில காலங்களுக்கு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளார். 

மேலும் செய்திகள்