பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நடந்தது

வக்பு வாரிய சொத்து தொடர்பான அறிக்கையை சட்டசபையில அரசு தாக்கல் செய்ய கோரி பா.ஜனதா எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் விதான சவுதா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-09-07 00:34 GMT
பெங்களூரு,

வக்பு வாரிய சொத்து தொடர்பான அன்வர் மணிப்பாடி அறிக்கையை சட்டசபையில் அரசு தாக்கல் செய்ய வேண்டும், வக்பு வாரிய சொத்துகளில் நடந்துள்ள முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா எம்.எல்.ஏ.,க்கள் எம்.எல்.சி.க்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் கோடா சீனிவாசபூஜாரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.சி.க்கள் கைகளில் பதாகைகளுடன் கலந்து கொண்டனர். அவர்கள் மாநில அரசுக்கு எதிராக, அன்வர் மணிப்பாடி அறிக்கையை வெளியிட கோரி கோஷங்களை எழுப்பினர். இதில் கோடா சீனிவாசபூஜாரி பேசியதாவது:-

வக்பு வாரிய சொத்துகள் குறித்து அன்வர் மணிப்பாடி விசாரணையை அறிக்கையை அரசு சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கவர்னர், மேலவை தலைவர் ஆகியோர் உத்தரவிட்டனர். இப்போது, கர்நாடக ஐகோர்ட்டு, 4 வாரத்திற்குள் சட்டசபையில் அன்வர் மணிப்பாடி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஆயினும் இந்த அரசு அந்த அறிக்கையை தாக்கல் செய்யுமா? என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் சிலர் சிக்குவார்கள் என்பதால் அந்த அறிக்கையை தாக்கல் செய்வதில் பின்வாங்குகிறது. அந்த அறிக்கையில் கூறியுள்ளப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கோடா சீனிவாசபூஜாரி பேசினார்.

இதில் அந்த அறிக்கையை தயாரித்த அன்வர் மணிப்பாடி பேசுகையில், “இந்த வக்பு வாரிய சொத்து முறைகேடு குறித்து அறிக்கை வழங்கிய பிறகு எனக்கு கொலை மிரட்டல் வந்தது. இப்போதும் இணையதளங்களில் கொலை மிரட்டல்கள் வருகின்றன. நான் வழங்கிய அந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். நான் இல்லாவிட்டாலும் போராட்டம் நிற்காது. முறைகேடு செய்யப்பட்ட வக்பு வாரிய சொத்துகளை திரும்ப பெறும் வரையிலும் இந்த போராட்டம் ஓயாது” என்றார். 

மேலும் செய்திகள்