புதுமாப்பிள்ளையின் மதுப்பழக்கத்தால் மனவேதனை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்தனர்

புதுமாப்பிள்ளையின் மதுப்பழக்கத்தால் வேதனை அடைந்த அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்தனர். இதில் தாய்-பாட்டி இறந்தனர்.

Update: 2018-09-09 00:02 GMT
சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மகாதேவபட்டினத்தைச் சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகன் கார்த்திக் (வயது 27). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 மாதங்களாகிறது. கார்த்திக் தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கார்த்திக்கின் தந்தை காசிநாதன் (65), தாயார் மாரியம்மாள் (60), பாட்டி வேதம்பாள் (80), கார்த்திக் மனைவி கவிதா (25) ஆகிய 4 பேரும் வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி விழுந்தனர்.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கார்த்திக்கின் தாயார் மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். காசிநாதன், கவிதா, வேதம்பாள் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை அழைத்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வேதம்பாள் இறந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்றதும், அதில் இருவர் பலியானதும் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்