தொடர் திருட்டில் ஈடுபட்ட தாய், மகன் உள்பட 3 பேர் கைது

ஓசூரில், தொடர் திருட்டில் ஈடுபட்ட தாய், மகன் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், 21 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2018-09-09 23:00 GMT
ஓசூர்,

ஓசூர் அட்கோ போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சரண்யா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பஸ் நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 2 பெண்கள் உள்பட 3 பேரை விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை அட்கோ போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதில் அவர்கள் மதகொண்டப்பள்ளி அருகே உள்ள சின்னகோடுப்பள்ளியை சேர்ந்த முனிராஜ் (வயது 20), அவரது தாய் சாந்தம்மா (40), வேப்பனப்பள்ளி அடுத்த நாச்சிகுப்பம் பகுதியை சேர்ந்த நாகரத்தினம்மா (35) என்பதும், ஓசூர் பகுதியில் வீடு புகுந்து திருடுவது மற்றும் முதியவர்களை ஏமாற்றி நகை பறிப்பில் ஈடுபட்டது என தொடர் திருட்டு செயல்களில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்