ஒரகடம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் கார்கள் திருடிய 2 பேர் கைது

ஒரகடம் பகுதியில் தனியார் கார் தயாரிக்கும் நிறுவனத்தில் கார்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-09-09 22:00 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் தனியார் கார் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அந்த நிறுவனத்தில் இருந்து 2 புதிய கார்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து கார் நிறுவனத்தின் மேலாளர் நவநீத் கடந்த வாரம் ஒரகடம் போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் விசாரணையில் கார்களை திருடியது அந்த நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை செய்து வந்த குன்றத்தூர் கே.எம்.கே. நகரை சேர்ந்த மாரிமுத்து என்கிற முகமது அசரப் (வயது 28) மற்றும் சென்னை தண்டையார்பேட்டை சத்தியா நகரை சேர்ந்த அருண்குமார் (27) என்பது தெரியவந்தது. மேலும் காவலாளிகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் போலி நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி கார்களை திருடியது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 2 கார்களும் கைப்பற்றப்பட்டது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்