மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல் : திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ராணுவ வீரர் பலி

தேனியில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ராணுவ வீரர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-09-09 21:30 GMT
தேனி,


தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சின்னஓவுலாபுரம் ஒத்தைவீடு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் சுந்தரமகாலிங்கம் (வயது 27). இவர், இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் பெண் பார்த்தனர். இதற் காக அவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

அதன்படி அவருக்கு பெண் பார்த்து திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்த மாதம் கடைசியில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில், சுந்தரமகாலிங்கம் சின்னமனூரில் இருந்து தேனி வழியாக நேற்று காலையில் மதுரைக்கு சென்று கொண்டு இருந்தார். தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் சென்று கொண்டு இருந்த போது, அவருக்கு பின்னால் அசுர வேகத்தில் வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது.

இதில் பஸ்சின் சக்கரம் அவருடைய தலையில் ஏறி இறங்கியது. ஹெல்மெட் (தலைக்கவசம்) அணிந்து இருந்த போதிலும் பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் பலத்த காயம் அடைந்த சுந்தரமகாலிங்கம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் ரமேஷ் (45) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் ராணுவ வீரர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்