புழல் சிறையில் பரபரப்பு காவலரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த கைதி

புழல் சிறையில் காவலரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த கைதியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-10 21:45 GMT
செங்குன்றம், 

சேலம் மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் ரசூலூதீன் (வயது 33). இவர் கடந்த மே மாதம் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் 5–வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ரசூலூதீன், 5–வது பிளாக்கில் இருந்து 4–வது பிளாக்குக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது சிறைக்குள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த லிவிங்ஸ்டன் என்ற சிறைகாவலர் அனுமதி இல்லாமல் 4–வது பிளாக்குக்கு ஏன் செல்லுகிறாய்? என ரசூலூதீனிடம் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரசூலூதீன் சிறை காவலரை பயங்கரமாக தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் லிவிங்ஸ்டனிடம் ‘உன்னை கொல்லாமல் விடமாட்டேன்’ என்றும் மிரட்டினார். இதையடுத்து அங்கிருந்த மற்ற சிறை காவலர்கள் ரசூலூதீனை மடக்கி பிடித்து 5–பிளாக்கில் உள்ள அறையில் அடைத்தனர். 

இதுகுறித்து சிறை அதிகாரி உதயகுமார் புழல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைக்காவலரை கைதி தாக்கிய சம்பவம் சிறைக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்