நடுரோட்டில் கார் தீப்பிடித்தது ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் உடல் கருகி பலி
புனேயில் கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்ததில், ஆஸ் பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் உடல் கருகி பலியானார்.
புனே,
புனே காலேவாடி நாகடே காலனியை சேர்ந்தவர் மனிஷ். இவரது மனைவி சங்கீதா(வயது44). நேற்று காலையில் வீட்டில் இருந்த சங்கீதாவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மனிசும், அவரது மகனும் சங்கீதாவை காரில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். இவர்களுடன் மனிஷின் பக்கத்து வீட்டுக்காரரும் சென்றார்.
கார் வாகட் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதைப்பார்த்து காரில் இருந்த 4 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். உயிைர காப்பாற்றி கொள்வதற்காக மனிஷ், அவரது மகன் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் காரில் இருந்து வெளியே குதித்தனர். அவர்கள் சங்கீதாவை காப்பாற்ற முயற்சி செய்தனர். அப்போது, துரதிருஷ்டவ சமாக கார் கதவு உள்பக்கமாக பூட்டிக்கொண்டது.
தீயில் கருகி சாவு
இந்தநிலையில், தீ கார் முழுவதும் வேகமாக பரவி எரிந்தது. இதில் சங்கீதா உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த வாகட் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் காரில் பற்றிய தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். காருக்குள் இருந்து சங்கீதாவின் உடல் கரிக்கட்டையாக மீட்கப்பட்டது. வாகட் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் காரில் எரிந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.