காதலி இறந்ததால் தஞ்சையில், விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை

தஞ்சை அருகே ஆற்றில் குதித்து காதலி இறந்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-09-11 00:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாதாக்கோட்டை சாலை வைரம் நகரை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் விக்னேஷ்(வயது20). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் தஞ்சை மானோஜிப்பட்டி காமாட்சி நகரை சேர்ந்த ஆறுமுகம் மகள் ஜெயஸ்ரீயும்(22) படித்து வந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந் தேதி கல்லூரியில் இருந்த விக்னேஷ், தனது காதலி ஜெயஸ்ரீயின் செல்போனை வாங்கி பார்த்தார். அப்போது அந்த செல்போனில் சில எண்களில் இருந்து அழைப்பு வந்திருந்தது. உடனே விக்னேஷ் ஜெயஸ்ரீயிடம், இந்த எண்கள் யாருடையது என்று கேட்டார். இதில் கோபமடைந்த ஜெயஸ்ரீ, என்னை சந்தேகப் படுகிறாயா? என்று கேட்டு விக்னேஷ்சுடன் சண்டை போட்டார். நீண்ட நேரத்திற்கு பின்னர் இருவரும் சமாதானம் அடைந்தனர்.

இதைதொடர்ந்து விக்னேஷ், தனது காதலியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு நெய்வாய்க்கால் பகுதியில் உள்ள கல்லணைக்கால்வாய்க்கு சென்றனர். அங்கு சென்ற பிறகும் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஜெயஸ்ரீ, கல்லணைக்கால்வாயில் ஓடிக்கொண்டு இருக்கும் தண்ணீரில் குதித்தார்.

தனது காதலி ஆற்றில் குதித்ததால் அவரை காப்பாற்றுவதற்காக விக்னேஷ்சும் ஆற்றில் குதித்தார். இருவரும் அடுத்தடுத்து ஆற்றில் குதித்ததை அங்கிருந்தவர்கள் பார்த்து இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் விக்னேஷை மட்டும் காப்பாற்றினர். ஆனால் ஜெயஸ்ரீயை மீட்க முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் தேடிப்பார்த்தும் ஜெயஸ்ரீயை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து 2 நாட்கள் கழித்து ஜெயஸ்ரீயின் உடல் தஞ்சை அருகே துறையூர் பாலம் அருகே சடலமாக மீட்கப்பட்டது. இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

காதலி தற்கொலை செய்த கொண்ட நாளில் இருந்து விக்னேஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று விக்னேஷ், தான் காதலி சென்ற இடத்திற்கே தானும் செல்வது என்று முடிவு செய்து விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்