விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-10 21:30 GMT
தேனி,


விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சிலை அமைப்பதற்கு சில முக்கிய நிபந்தனைகளை கடைப்பிடித்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை கரைப்பதற்கு அரசின் விதிமுறைகள் மற்றும் சிலைகள் கரைக்கும் இடம் குறித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-

களிமண்ணால் செய்யப்பட்டது, சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்ற கிழங்கு மாவு, மரவள்ளி கிழங்கு, ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண் டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. சிலைகள் கரைப்பதற்கு முன்பாக மாலைகள், வஸ்திரங்கள், அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். இவற்றை கரைக்கப்படும் இடங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் இந்த பொருட்களை தரம் வாரியாக பிரித்துப் போட வேண்டும்.

விநாயகர் சிலைகள் மாவட்ட நிர்வாகத்தினால் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். அதன்படி, பெரியகுளத்தில் வராகநதியில் பாலசுப்பிரமணியன் கோவில் அருகிலும், உத்தமபாளையத்தில் முல்லைப் பெரியாற்றில் ஞானம்மாள் கோவில் அருகிலும், கம்பத்தில் சுருளிப்பட்டி சாலையோரத்தில் முல்லைப் பெரியாற்றிலும், தேனி முல்லைப்பெரியாற்றில் அரண்மனைப்புதூர் பாலம் அருகிலும் சிலைகளை கரைக்க வேண்டும்.

ஆண்டிப்பட்டி பகுதியில் வைக்கப்படும் சிலைகளை வைகை அணை அருகில் உள்ள ஆற்றுப்பாலம் பகுதியிலும், வருசநாட்டில் வைகை ஆற்றில் மொட்டப்பாறை தடுப்பணையிலும், போடியில் கொட்டக்குடி ஆற்றில் புதூர் பகுதியிலும், மார்க்கையன்கோட்டை மற்றும் சின்னமனூர் பகுதிகளில் வைக்கும் சிலைகளை முல்லைப்பெரியாற்றில் சின்னமனூர்-மார்க்கையன்கோட்டை சாலையில் உள்ள பாலம் அருகிலும் கரைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பொதுமக்கள் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்