டீசல் விலை உயர்வை கண்டித்து ரிக் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

டீசல் விலை உயர்வை கண்டித்து சேலம் மாவட்டத்தில் ரிக் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-11 22:45 GMT
சேலம்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலம் ரிக் உரிமையாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு காலி இடத்தில் 50-க்கும் மேற்பட்ட ரிக் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் அங்கு ரிக் உரிமையாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ரிக் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதைத்தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு சங்க செயலாளர் சேதுராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட ரிக் வண்டிகள் உள்ளன. டீசல் விலை உயர்வினால் கடும் நெருக்கடிக்கு நாங்கள் ஆளாகி வருகின்றோம். மத்திய, மாநில அரசுகளின் ஜி.எஸ்.டி. வரியால் தொழில் செய்ய முடியாத சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம்.

மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவது போல், குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக ஆழ்துளை கிணறு அமைக்கும் எங்களுக்கும் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். டீசல் விலையை குறைக்காவிட்டால் நாங்கள் பொதுமக்கள் மீது தான் இந்த தொகையை வசூலிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதாவது டீசல் விலையில் இருந்து ரூ.10 முதல் ரூ.20 வரை ஒரு அடிக்கு உயர்த்த முடிவு செய்து உள்ளோம். எனவே மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் மாவட்டத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட ரிக் உரிமையாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். ரிக் தொழிலாளர்கள் சிலர் சாலையோரத்தில் அடுப்பு வைத்து சமையல் செய்து சாப்பிட்டதை காணமுடிந்தது.

மேலும் செய்திகள்