விவசாயிகளுக்கு சூரிய சக்தியில் இயக்கும் மோட்டார்களுக்கு 90 சதவீதம் மானியம் கலெக்டர் ஷில்பா தகவல்
விவசாயிகளுக்கு சூரிய சக்தியில் இயக்கும் மோட்டார்கள் 90 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
விவசாயிகளுக்கு சூரிய சக்தியில் இயக்கும் மோட்டார்கள் 90 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார்கள்
தமிழகத்தின் மின்சார தேவையில் 20 சதவீதம் விவசாயத்திற்கு செலவிடப்பட்டு வருகிறது. இதுவரை 20 லட்சத்து 62 ஆயிரம் மின் இணைப்புகள் விவசாயத்திற்காக, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் பல விவசாயிகள் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
மானியம்
தமிழகத்தின் மின்சார தேவையை குறைத்திடவும், சுற்றுச்சூழலை பேணி காக்கவேண்டும் என்பதற்காகவும் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார்களை 90 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு அரசு வழங்கி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2017–ம் ஆண்டு 35 விவசாயிகளுக்கும், 2018–ம் ஆண்டு 32 விவசாயிகளுக்கும் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் 105 ஏக்கர் நிலபரப்பு பாசன வசதி பெறுகிறது. இந்த திட்டத்தின் மூலம் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார்கள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகளை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.