ரோட்டை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி உதவி பேராசிரியர் சாவு

தவளக்குப்பத்தில் ரோட்டை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி உதவி பேராசிரியர் பரிதாபமாகச் செத்தார்.

Update: 2018-09-11 22:50 GMT
பாகூர்,

திருவண்ணாமலை மாவட்டம் போரூர் அருகே செம்மியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகன் வீரபாண்டியன் (வயது 23), இவர் புதுவை தவளக்குப்பம்-அபிஷேகப்பாக்கம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். வேலைக்கு செல்வதற்கு வசதியாக அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.

சம்பவத்தன்று பணம் எடுப்பதற்காக புதுச்சேரி - கடலூர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு வீரபாண்டியன் சென்றார்.

அந்த பகுதியில் ரோட்டை கடந்து செல்ல முயன்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். இதைப்பார்த்ததும் அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் வீரபாண்டியன் சேர்க்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாகச் செத்தார்.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்