பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்
பாரதிதாசன் உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகையை அடுத்த செல்லூரில் பாரதிதாசன் உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 1,500 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி கிழக்கு கடற்கரை சாலை அருகே அமைந்துள்ளது. இந்த பகுதியில் முறையான பஸ் வசதி இல்லாமல் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் மாணவ-மாணவிகள் புதிய பஸ் நிலையம், புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு நடந்து செல்லும் அவலநிலைக்கு உள்ளாகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று காலை கல்வி உதவித்தொகை வழங்கவும், பஸ் வசதி வேண்டியும், பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கல்லூரிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டியும், கல்வி தொகை வழங்க வேண்டியும் கோஷங்கள் எழுப்பினர்.