ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு

ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

Update: 2018-09-14 22:30 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. ஓசூர் நேதாஜி ரோட்டில், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில், பஞ்சமுக விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஓசூர் பாகலூர் ரோடு அருகேயுள்ள ஜனப்பர் தெருவில், பாலவிநாயகா பக்த மண்டலி சார்பில், பாதாள விநாயகர் சிலை வைத்து பூஜைகள் நடைபெற்றது. இங்கு, கோட்டைக்குள் நுழைந்து, குகை வழியாக பாதாளத்திற்குள் இறங்கி சென்று, விநாயகரை தரிசிப்பது போன்று, தத்ரூபமாக அரங்கு அமைத்து, அதில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வருகின்றனர்.

இதேபோல், ஓசூர் ஏரித்தெருவில், பாற்கடல் விநாயகர், ஓசூர் ராம்நகர், வாணியர் தெரு ஆகிய இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகம் எதிரே இந்து முன்னணி அமைப்பின் சார்பில், ஆஞ்சநேய விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெற்றது. ஓசூர் எம்.ஜி.ரோடு சுண்ணாம்பு தெருவில், வைக்கப்பட்டுள்ள 18 அடி உயர எலி வாகன விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டு வருகின்றனர். ஓசூர் தாசிரிப்பேட்டையில், விநாயக பெருமான், கிருஷ்ணர் மற்றும் மீராவுடன் இருப்பது போன்று சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளுக்கு இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தேன்கனிக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகில் அரங்கு போல் அமைத்து அதில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு விழாக்குழுவினர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அரசு மேல்நிலைப்பள்ளி சாலையில் சீரடி சாய்பாபா கோவில் போல் வடிவமைத்து விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.

இதேபோல் நகரில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்து அமைப்பினர் மற்றும் விழாக்குழு சார்பில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை 3-வது நாளில் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிராமம் தோறும் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து கிராமங்களில் கபடி, வழுக்கு மரம், உறியடித்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வேப்பனப்பள்ளியில் நாடுவனப்பள்ளி கிராமத்தில் சுமார் 40 அடி உயர வழுக்கு மரத்தில் இளைஞர்கள் போட்டி போட்டு ஏறி பரிசுகளை வென்றனர்.

மேலும் செய்திகள்