தசரா விழாவில் பங்கேற்க 2-வது கட்ட கஜபயணம் மேலும் 6 யானைகள் மைசூரு வந்தன
தசரா விழாவில் பங்கேற்க 2-வது கட்ட கஜபயணமாக மேலும் 6 யானைகள் நேற்று மைசூருவுக்கு வந்தன.
மைசூரு,
தசரா விழாவில் பங்கேற்க 2-வது கட்ட கஜபயணமாக மேலும் 6 யானைகள் நேற்று மைசூருவுக்கு வந்தன.
கஜபயணம்
உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடக்கிறது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலம் அடுத்த மாதம் 19-ந்தேதி நடக்கிறது. இதில் யானைகள் கலந்துகொண்டு அணிவகுத்து செல்லும். இந்த விழாவில் பங்கேற்க முகாம்களில் வளர்க்கப்பட்டு வரும் யானைகள் மைசூருவுக்கு அழைத்துவரப்படுவது வழக்கம். இந்த நிகழ்வு கஜபயணம் என்று அழைக்கப்படுகிறது.
முதற்கட்டமாக அர்ஜுனா உள்பட 6 யானைகள் கடந்த 2-ந்தேதி கஜபயணமாக மைசூருவுக்கு அழைத்துவரப்பட்டன. அந்த யானைகள் மைசூரு மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் தங்கவைக்கப்பட்டு, 5-ந்தேதி அரண்மனைக்குள் அழைத்துவரப்பட்டன. அந்த யானைகளுக்கு தினமும் நடைபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 6 யானைகள் வருகை
இந்த நிலையில் 2-வது கட்ட கஜபயணமாக மேலும் 6 யானைகள் நேற்று மைசூருவுக்கு அழைத்துவரப்பட்டன. அதாவது மைசூரு மாவட்டம் நாகரஒலே வனச்சரணாலயத்திற்கு உட்பட்ட மத்திக்கோடு முகாமில் இருந்து பலராமா, அபிமன்யூ, துரோனா ஆகிய 3 யானைகளும், குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா குசால்நகர் அருகே துபாரே முகாமில் இருந்து பிரசாந்த், காவேரி, விஜயா ஆகிய 3 யானைகளும் என மொத்தம் 6 யானைகள் லாரிகள் மூலம் நேற்று மாலை மைசூருவுக்கு வந்தன.
பின்னர் அந்த 6 யானைகளும் மைசூரு அரண்மனையின் ஜெயமார்த்தாண்ட நுழைவு வாயில் வழியாக அரண்மனை சம்பிரதாய முறைப்படி சிறப்பு பூஜை செய்து, ஆரத்தி எடுத்தும் அரண்மனைக்குள் அழைத்துவரப்பட்டன. இந்த யானைகளுடன் அதன் பாகன்களும், பாகன்களின் குடும்பத்தினரும் வந்துள்ளனர். அவர்களுக்கு அரண்மனை வளாகத்தில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.