சமையல் செய்த போது தீ விபத்து: மனைவியை காப்பாற்ற முயன்ற உதவி தலைமை ஆசிரியர் உடல் கருகி பலி

சமையல் செய்த போது ஏற்பட்ட தீ விபத்தில் மனைவியை காப்பாற்ற முயன்ற உதவி தலைமை ஆசிரியர் உடல் கருகி பலியானார்.

Update: 2018-09-14 22:45 GMT
திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அருகே சமையல் செய்த போது தீயில் சிக்கிய மனைவியை காப்பாற்ற முயன்ற உதவி தலைமை ஆசிரியர் உடல் கருகி இறந்தார். அவருடைய மனைவிக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ராயநல்லூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் அருள்ராஜன் (வயது57). இவர் பள்ளங்கோவிலில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஸ்டெல்லா. இவர் திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று ஸ்டெல்லா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்து உடல் கருகி அலறி துடித்தார்.

மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அருள் ராஜன் அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் தீப்பிடித்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் அருள்ராஜன் மற்றும் ஸ்டெல்லாவை சம்பவ இடத்தில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்ராஜன் இறந்தார். ஸ்டெல்லா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அருள்ராஜன் மகன் ரேணிஜோ ஆலிவலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீக்காயமடைந்த மனைவியை காப்பாற்ற முயன்ற உதவி தலைமை ஆசிரியர் உடல் கருகி இறந்த சம்பவம் ராயநல்லூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்