கோபி அருகே போக்குவரத்து கழக பணியாளர் வீட்டில் கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே போக்குவரத்து கழக பணியாளர் வீட்டில் கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது.

Update: 2018-09-16 22:00 GMT

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளைத்தில் வசித்து வருபவர் திருமூர்த்தி. இவர் அரசு போக்குவரத்து கழக பணியாளராக பணியாற்றி வருகிறார். திருமூர்த்தி அவரது வீட்டில் நேற்று நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் சுவர் அருகில் ஒரு பாம்பு ஊர்ந்து வந்தது. இதுகுறித்து அவர் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கு வந்து லாவகமாக பாம்பை பிடித்து ஒரு கூடையில் போட்டனர்.

பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள். இதைத்தொடர்ந்து குள்ளம்பாளையம் வனவர் பழனிச்சாமி மற்றும் வனத்துறையினர் அங்கு வந்து பாம்பை சாக்குபையில் போட்டு பாதுகாப்பாக எடுத்துச்சென்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘பிடிபட்டது அதிக வி‌ஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஆகும். இந்த பாம்பு டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உள்பட்ட நவக்கிணறு மாதேஸ்வரன் கோவில் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும். பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த வாய்க்காலில் மிதந்து வந்த பாம்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்திருக்கலாம்’ என்றனர்.

மேலும் செய்திகள்