காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் ஆட்டோக்கள் நிறுத்த அனுமதிக்க வேண்டும் - டிரைவர்கள், கலெக்டரிடம் மனு

காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் ஆட்டோக்கள் நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் டிரைவர்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2018-09-17 23:08 GMT
வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக கலெக்டரிடம் கொடுத்தனர்.

இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் அட்டை, கடனுதவி, பொதுநல மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு வகை பிரச்சினைகள் குறித்து 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்த இருசமூகத்தை சேர்ந்தவர்கள் தனித்தனியாக கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், எங்கள் பகுதியில் கடந்த 13-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினோம். அப்போது விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக வைத்திருந்த பேனர்களை சிலர் கிழித்தனர். இதுதொடர்பாக சில இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. அதனால் மற்றொரு சமூகத்தை சேர்ந்த சிலர், எங்கள் பகுதிக்குள் புகுந்து வீடுகள் மீது கல்வீசி தாக்கி, மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கினர்.

மேலும் பொதுமக்களையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சாதி மோதல் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே வீடுகள் மீது கல்வீசி, பொதுமக்களை தாக்கிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அ.தி.மு.க. அண்ணா ஆட்டோ தொழிற்சங்க டிரைவர்கள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், காட்பாடி ரெயில் நிலைய பகுதியில் 80-க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறோம். ரெயில் நிலைய வளாகத்தில் ஆட்டோக்கள் நிறுத்த 6 மாதத்திற்கு ஒரு முறை ரூ.2,124 செலுத்தி ரசீது பெற்று வந்தோம். ‘ப்ரீபெய்டு’ ஆட்டோ சேவை காரணமாக ஆட்டோக்கள் நிறுத்த ரசீது வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

தற்போது ‘ப்ரீபெய்டு’ சேவை செயல்படுத்தப்படாமல் உள்ளது. அதனால் ரெயில் நிலைய வளாகத்தில் ஆட்டோக்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எனவே எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ரெயில் நிலைய வளாகத்தில் பழைய மாதிரி ஆட்டோக்கள் நிறுத்தி இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குடியாத்தத்தை அடுத்த சுண்ணாம்புபேட்டை பரசுராம் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுமதி (வயது 26) அளித்த மனுவில், பிளஸ்-2 வரை படித்துள்ளேன். போதிய வாழ்வாதாரம் இன்றி எனது குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறது. எனவே எனக்கு வேலை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராமன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்