குடிசையில் தீ விபத்து: உடல் கருகி மூதாட்டி பரிதாப சாவு

போச்சம்பள்ளி அருகே குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-09-19 23:15 GMT
மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள களர்பதி கொல்லகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தியம்மாள் (வயது 85). இவருடைய மருமகள் மங்கம்மாள் (60). இவர்கள் இருவரும் அப்பகுதியில் குடிசையில் வசித்து வந்தனர். இதில் கிருஷ்ணமூர்த்தியம்மாளுக்கு கண்கள் தெரியாது. மேலும் நடக்க முடியாது.

இந்த நிலையில் நேற்று மாலை வெளியே சென்று விட்டு வந்த மங்கம்மாள் வீட்டில் இருந்த மின் சுவிட்சை ஆன் செய்தார். அப்போது ஏற்பட்ட மின்கசிவு காரணமாக குடிசையில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மங்கம்மாள் வீட்டை விட்டு வெளியேறி கூச்சலிட்டார். அந்த நேரம் குடிசைக்குள் கிருஷ்ணமூர்த்தியம்மாள் இருந்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று கிருஷ்ணமூர்த்தியம்மாளை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் தீ மளமளவென எரிந்ததால் அவர்களால் குடிசைக்குள் செல்ல முடியவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். தொடர்ந்து அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது மூதாட்டி கிருஷ்ணமூர்த்தியம்மாள் தீயில் உடல் கருகி பரிதாபமாக இறந்து கிடந்தார். மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் அங்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டி தீயில் உடல் கருகி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்