குன்னம் அருகே குட்டையில் மூழ்கிய கல்லூரி மாணவர் உடல் மீட்பு

குன்னம் அருகே குட்டையில் மூழ்கிய கல்லூரி மாணவர் உடல் மீட்கப்பட்டது.

Update: 2018-09-23 22:45 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள லெப்பைக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சையது அலி. இவரது மகன் முகமது ரசின் (வயது 18). இவர் சென்னை தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் அபுல் ஹசன் (18) திருச்சி தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் 2 பேர் மற்றும் அவர்களது நண்பர்கள் உள்பட 9 பேர் நேற்று முன்தினம் வேப்பூர் அருகே கோவிந்த ராஜபட்டினம் கிராமத்தில் உள்ள சுண்ணாம்புக்கல் குவாரி குட்டையில் குளிக்க சென்றனர். இவர்கள் யாருக்கும் நீச்சல் தெரியாது.

இந்நிலையில் குட்டையில் இறங்கி சுற்றுச்சுவரை பிடித்து கொண்டு அனைவரும் குளித்தனர். இதில் முகமது ரசின், அபுல் ஹசன் ஆகிய 2 பேரும் சுற்றுச்சுவரை பிடித்து குளித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்தனர். இதைப்பார்த்து பதறிப்போன நண்பர்கள் அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தனர். மேலும் இதுகுறித்து குன்னம் போலீசாருக்கும், வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பெரம்பலூர், வேப்பூர் தீயணைப்பு படை வீரர்கள், விரைந்து வந்து பிளாஸ்டிக் படகுகளை கொண்டு தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் 3 மணி நேரம் கழித்து அபுல் ஹசன் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தீயணைப்பு படைவீரர்கள் முகமது ரசின் உடலை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் முகமது ரசின் உள்ளாடை மட்டுமே அணிந்து குளித்ததால், கொக்கி கம்பிகள் மூலமாக உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் முகமதுரசின் உடல் இரவு 11 மணிக்கு மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்