பொய்கை அணையில் விரிசல் தளவாய்சுந்தரம் பார்வையிட்டார்

ஆரல்வாய்மொழி அருகே பொய்கை அணையில் விரிசல் ஏற்பட்டுள்ள இடத்தை தளவாய்சுந்தரம் பார்வையிட்டார்.

Update: 2018-09-24 23:00 GMT
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே பொய்கை அணை உள்ளது. இந்த அணையில் தற்போது 28 அடி தண்ணீர் உள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது, அணையில் மறுகால் மதகின் அருகே சுவரில் லேசாக விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் நேற்று பொய்கை அணையை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் விரிசல் ஏற்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், விரிசலை கண்டறிந்து அதை உடனே சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

 அணையில் இதுவரை 20 அடி வரை தண்ணீர் இருந்த காலத்தில் நீர் கசிவு ஏற்படவில்லை. தற்போது நீர் மட்டம் 28 அடியாக உயர்ந்த நிலையில் நீர் கசிவு ஏற்படுகிறது. எனவே, 20  அடிக்கு மேல் 28 அடிக்கு உள்பட்ட இடத்தில் இருந்துதான் நீர் கசிவு ஏற்படுகிறது. நீர் மட்டத்தை 20 அடியாக குறைத்த பின்பு, நீர் கசிவு ஏற்படும் இடத்தை கண்டுபிடித்து சரி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன், அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேத அருள்சேகர், உதவி செயற்பொறியாளர்கள் வசந்தி, வின்சென்ட் லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்