2 குழந்தைகளை கொன்றுவிட்டு வி‌ஷம் குடித்த தந்தையும் சிகிச்சை பலனின்றி சாவு

2 குழந்தைகளை கொன்றுவிட்டு வி‌ஷம் குடித்த தந்தையும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2018-09-24 23:00 GMT

அந்தியூர்,

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள செங்குளம் பகுதியை சேர்ந்தவர் சிக்கரசன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (39). இவர்களுடைய மகள்கள் சுதா (16), மேகலா (10). கருத்து வேறுபாடு ஏற்பட்டு சித்ரா கணவரை பிரிந்து சென்றுவிட்டார். மகள்கள் சுதாவும், மேகலாவும் தந்தையுடன் வசித்து வந்தார்கள்.

இந்த நிலையில் தீராத நோயால் அவதிப்பட்ட சிக்கரசன் தற்கொலை செய்து கொள்ள நினைத்தார். அப்போது தான் இறந்ததால் தன்னுடைய மகள்களை யாரும் கவனிக்க மாட்டார்கள். அதனால் மகள்களையும் கொன்றுவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த 22–ந் தேதி தன்னுடைய 2 மகள்களுக்கும் வி‌ஷம் கலந்த உணவை கொடுத்துவிட்டு, சிக்கரசன் தானும் வி‌ஷம் குடித்தார். இதனால் மயங்கி கிடந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேகலா பரிதாபமாக இறந்தாள். உடனே மற்ற 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை சுதா பரிதாபமாக இறந்தார். சிக்கரசன் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சிக்கரசனும் இறந்தார்.

இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்