ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த தாய், மகன் உள்பட 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த தாய், மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-09-25 22:15 GMT
சென்னை, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று அதிகாலை காஞ்சீபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த தமிழக அரசு பஸ்சை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர்.

அந்த பஸ்சில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 3 பேரின் பைகளில் 22 பாக்கெட்டுகளில் மொத்தம் 44 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது.

3 பேர் கைது

போலீஸ் விசாரணையில் ஆந்திராவில் இருந்து அரசு பஸ்சில் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரோஜா (வயது45), அவரது மகன் ராஜு (24) மற்றும் மதுரை ஆண்டிப்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் (39) என்பது தெரியவந்தது.

இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்