பெண் ஊழியரை கற்பழித்த தனியார் நிறுவன மேலாளர் கைது

திருமண ஆசைகாட்டி பெண் ஊழியரை கற்பழித்த தனியார் நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-03 22:50 GMT
மும்பை,

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவை சேர்ந்தவர் வினோத் (வயது34). இவர் அம்போலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அந்த நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்த 22 வயது இளம்பெண்ணுக்கும் இடையே பணியை தாண்டிய பழக்கம் உருவானது.

இதையடுத்து இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். இந்தநிலையில், இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறிய வினோத், நாலச்சோப்ராவுக்கு அழைத்து சென்று அங்கு வைத்து இளம்பெண்ணை கற்பழித்து உள்ளார்.

இந்த நிலையில், இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வினோத்தை வற்புறுத்தி உள்ளார். ஆனால் வினோத் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். இதையடுத்து இளம்பெண் வினோத்திடம் விசாரித்தார். அப்போது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதும், குடும்பத்துடன் வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சம்பவம் குறித்து அம்போலி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன மேலாளர் வினோத்தை கைது செய்தனர்.

இதையடுத்து அவர் பாந்திரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்காக போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்