மைசூரு தசரா விழாவில் பங்கேற்க குமாரசாமி- சுதாமூர்த்திக்கு அழைப்பு

மைசூரு விழாவில் பங்கேற்க குமாரசாமி, சுதாமூர்த்தி ஆகியோருக்கு மந்திரி ஜி.டி.தேவே கவுடா தலைமையிலான குழுவினர் நேற்று அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தனர்.

Update: 2018-10-04 00:26 GMT
பெங்களூரு,

உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 10-ந் தேதி தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் கடைசி நாளில் ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கிறது. இதை காண இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருகிறார்கள். இந்த தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இன்போசிஸ் அறக்கட்டளை தலைவி சுதா மூர்த்தி விழாவை தொடங்கி வைக்கிறார்.

இதில் முதல்-மந்திரி குமாரசாமி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி ஜி.டிதேவேகவுடா தலைமையிலான விழா குழுவினர் நேற்று பெங்களூருவில் முதல்-மந்திரி குமாரசாமியை நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது தசரா விழாவில் கலந்து கொள்ளுமாறு அவருக்கு குழுவினர் அழைப்பிதழ் வழங்கினர். அதைத் தொடர்ந்து, தசரா விழாவை தொடங்கி வைக்க உள்ள சுதாமூர்த்திக்கும் அந்த குழுவினர் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி முறைப்படி அழைப்பு விடுத்தனர்.

அதைதொடர்ந்து கவர்னர் வஜூபாய் வாலா, ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோருக்கும் அந்த விழா குழுவினர் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி தசரா விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். அழைப்பிதழ் வழங்க மந்திரி சா.ரா.மகேஷ், கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் உள்பட பலர் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்