மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் நிழற்கூரை அமைக்க கோரிக்கை

புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் நிழற்கூரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-10-04 22:30 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் மாநகராட்சி விளையாட்டு மைதானம் உள்ளது. வடசென்னையின் பெரிய விளையாட்டு மைதானமாக இது திகழ்கிறது. இந்த மைதானத்தை ஒட்டியே உடற்பயிற்சி கூடம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கட்டிடம் உள்ளது.

புளியந்தோப்பு மட்டுமின்றி வியாசர்பாடி, ஓட்டேரி, அயனாவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான சிறுவர்கள், வாலிபர்கள் இந்த விளையாட்டு மைதானத்தில்தான் தினமும் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, கபடி, தடகளம் உள்பட பல்வேறு விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்கள் மற்றும் முதியவர்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளவும் இங்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தில் குழந்தைகளுக்கான சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு உபகரணங்களும் உள்ளன.

இந்த விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள், குத்து சண்டை போட்டிகள் அவ்வப்போது நடைபெறும். போட்டிகளை 500-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து ரசிக்கும் வகையில் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் விளையாட்டு பிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இந்த மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை சீரமைத்து கொடுத்தாலும், அவர்களுக்கு பெரிய குறையாக இருப்பது விளையாட்டு மைதானத்தில் ஒதுங்குவதற்கு நிழற்கூரை இல்லை என்பதுதான்.

பூங்காவில் விளையாடும் குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள் கடும் வெயிலில் விளையாடும் சூழல் உள்ளது. நடைபயிற்சியில் ஈடுபடும் பெண்கள், முதியவர்கள் நடைபயிற்சி முடிந்து ஓய்வு எடுக்க நிழற்கூரை இல்லை. இதனால் அவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இது தொடர்பாக அந்த விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தும் வாலிபர்கள் கூறியதாவது:-

நாங்கள் தினமும் காலை முதல் இரவு 7 மணிவரையில் இந்த விளையாட்டு மைதானத்தில் விளையாடி வருகிறோம். விடுமுறை நாட்களில் இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கால்பந்து, கிரிக்கெட் விளையாடுவார்கள்.

விளையாடிய பிறகு நாங்கள் களைப்பாக இருந்தால் சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும், பார்வையாளர்கள் நிழலில் அமர்ந்து பார்க்கவும் இங்கு நிழற்கூரை வசதி இல்லை. ஆர்வமாக விளையாடுபவர்கள் வெயிலின் தாக்கத்தால் சிலநேரம் மயங்கி விழும் நிலையும் உள்ளது.

பார்வையாளர்கள் அமரும் இடத்தில் நிழற்கூரை அமைத்து கொடுத்தால் வெயில், மழை நேரங்களில் பார்வையாளர்கள் மட்டுமின்றி விளையாடுபவர்களும் ஒதுங்கவும், சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்கும் வசதியாக இருக்கும்.

இல்லாவிட்டால் மாநகராட்சி சார்பில் விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு, அதை முறையாக பராமரித்தால் அதுவே நிழற்கூரையாக அனைவருக்கும் பயன்தரும். எனவே விளையாட்டு மைதானத்தில் நிழற்கூரை அமைக்கவோ அல்லது மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்