லஞ்சம் வாங்கிய வழக்கு: கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு ஜெயில் - வேலூர் கோர்ட்டு தீர்ப்பு

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2018-10-05 23:15 GMT
வேலூர்,

அரக்கோணம் தாலுகா கீழாந்துரை கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாதரெட்டி. இவர் தனது வீட்டிற்கு இலவச மின் இணைப்பிற்காக, தான் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதற்கான சான்றிதழ் பெற உளியம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலரான சுப்பிரமணியை அணுகினார். அப்போது அவர் ரூ.1000 லஞ்சம் கேட்டார். இதுகுறித்து ரகுநாதரெட்டி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து கடந்த 23.11.2010 அன்று ரகுநாதரெட்டியிடம் லஞ்சப்பணத்தை சுப்பிரமணி வாங்கும் போது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனால் சுப்பிரமணி பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். லஞ்சப்புகார் அளித்த ரகுநாதரெட்டியும் இறந்து விட்டார்.

இந்த வழக்கில் நீதிபதி என்.பாரி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணிக்கு (வயது 64) 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

இதையடுத்து போலீசார் அவரை பலத்த காவலுடன் வேலூர் ஜெயிலுக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

மேலும் செய்திகள்