கச்சிராயப்பாளையம் அருகே, டிராக்டர் மோதி வாலிபர் பலி

கச்சிராயப்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-10-09 21:45 GMT
கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அம்மாபேட்டை மேற்கு தெருவை சேர்ந்தவர் சோலை மகன் இளையராஜா (வயது 28). இவரது மனைவி வைஷ்ணவி(20). நேற்று இளையராஜா அம்மாபேட்டை பஸ் நிறுத்தத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே க.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி மகன் சேட்டு(30) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக இளையராஜாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளையராஜா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இளையராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இளையராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வைஷ்ணவி கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்