ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டம்; கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு

ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டம்; கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு.

Update: 2018-10-09 22:15 GMT
தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்துக்காக மேலூர், புதுச்சாவடி, ஜெயங்கொண்டம், தேவனூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்கள் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டது. அப்போது வழங்கப்பட்ட இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை என விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இதையடுத்து ஜெயங்கொண்டத்தில் 2 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில், ஏக்கர் ஒன்றிற்கு குறைந்தது ரூ.13 லட்சம் வழங்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அனல்மின் திட்டத்துக்கு நிலம் கொடுத்த மேலூர் கிராமமக்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு சந்தை மதிப்பை விட இரண்டு மடங்கு கூடுதலாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து கலெக்டர், தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் கோரிக்கை மனு எழுதி கொடுத்தனர்.

மேலும் செய்திகள்