குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தாததை கண்டித்து தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தப்படாததை கண்டித்து திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-09 22:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாதந்தோறும் முதல் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இந்த மாதம் (அக்டோபர்) முதல் செவ்வாய்க்கிழமையன்று காந்தி ஜெயந்தி விழா நடந்ததால் அரசு விடுமுறையையொட்டி குறைதீர்வுநாள் கூட்டம் நடத்தப்படவில்லை.

அந்த கூட்டம் 9-ந் தேதியன்று 2-வது செவ்வாய்க்கிழமை நடைபெறும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். அப்போது தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என முடிவு செய்திருந்த அவர்கள் நேற்று குறைதீர்வு கூட்டம் நடைபெறும் என கருதி தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர்.

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறாவிடில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே விவசாயிகள் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று விவசாயிகள், திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்துக்கு வந்தபோது குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறவில்லை.

இதனையடுத்து குறைதீர்வுநாள் கூட்டம் நடத்தாத வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாதந்தோறும் முதல் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், விவசாயிகளிடம் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், ஜே.சிவா, பாண்டித் துரை, பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்