கல்வராயன்மலை அருகே: டிராக்டரில் இருந்து தவறி விழுந்த மாணவன் பலி

கல்வராயன்மலை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2018-10-10 22:00 GMT
கச்சிராயப்பாளையம், 

திருக்கோவிலூர் அருகே உள்ள சோலைவண்டிபுரத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு பசுபதி (வயது 13), கபிலன்(10) என்ற 2 மகன்கள் இருந்தனர். கல்வராயன்மலை அருகே சேராப்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பசுபதி 8-ம் வகுப்பும், கபிலன் 5-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

அவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்தனர். நேற்று காலை பசுபதி, கபிலன் ஆகியோர் வெள்ளிமலை சாலையில் பெருக்கம்பட்டில் உள்ள விளை நிலத்துக்கு குளிக்க செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி காலை 8 மணி அளவில் விடுதியில் இருந்து வெளியே வந்த பசுபதி, கபிலன் ஆகியோர் தங்களது நண்பர்களுடன் அந்த வழியாக வந்த ஒரு டிராக்டரில் ஏறினர். அப்போது கபிலன் டிராக்டரில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தான். இதில் பலத்த காயமடைந்த அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுபற்றி தகவல் அறிந்த கரியாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான கபிலன் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்