காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி கும்பகோணத்தில் கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-10 22:45 GMT
கும்பகோணம்,

கல்லூரிகளில் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். எம்.பில்., பி.எச்.டி. முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தர ஊதிய உயர்வு வழங்கியதில் உள்ள நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்.

2015-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முழு தகுதிச்சான்று வழங்க வேண்டும். பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும்.

கல்லூரி ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் மீது விசாரணையின்றி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக துணை தலைவர் சகாதேவன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ராஜராஜன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் ரமேஷ், பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 14-ந் தேதி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு உண்ணாவிரதம் இருக்க போவதாக கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்