ராஜாக்கமங்கலம் அருகே பலத்த மழை: வீடு இடிந்து மூதாட்டி சாவு

ராஜாக்கமங்கலம் அருகே பலத்த மழைக்கு வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலியானார்.

Update: 2018-10-11 22:45 GMT
ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பூச்சிவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சமுத்திரபாண்டியன். இவருடைய மனைவி தங்க நாடாச்சி (வயது 87). இவர்களுக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். மகன்கள் மற்றும் மகள்களுக்கு திருமணம் முடிந்து அனைவரும் தனியாக வசித்து வருகின்றனர்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சமுத்திரபாண்டியன் இறந்து விட்டார். அதைதொடர்ந்து தங்க நாடாச்சி, தனியாக வீட்டில் வசித்து வந்தார். அந்த வீடு மண் சுவர் கொண்ட ஓடு போட்ட வீடு ஆகும். இவரது மகன்கள், தங்க நாடாச்சியை அந்த வீட்டில் வசிக்க வேண்டாம் என்றும், தங்களுடன் வந்து வசிக்கும்படியும் பல முறை அழைத்தனர். ஆனால் தங்க நாடாச்சி, தனது கணவர் கட்டிய வீட்டில் அவர் நினைவாக வசிக்க விரும்புவதாக கூறி, அவர்களுடன் செல்ல மறுத்து அந்த வீட்டிலேயே தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நாகர்கோவில் மற்றும் ராஜாக்கமங்கலத்தில் பலத்த மழை பெய்தது. இரவு தங்க நாடாச்சி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் மழையின் காரணமாக வீடு திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தங்க நாடாச்சி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்