மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று கடற்கரை செயற்கை மணல் பரப்பு பணியை முடிக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்

புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு அமைக்கும் பணியை மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று பணியை முடிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.

Update: 2018-10-11 22:19 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியில் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம்-மத்திய நில அறிவியல் அமைச்சகம் இணைந்து கடலில் செயற்கை மணல் பரப்பு திட்டத்தை உருவாக்க திட்டமிட்டது.

அதன்படி புதுவை தலைமை செயலகம் எதிரே (வடக்குப்பகுதி) செயற்கை பாறைத்திட்டு உருவாக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் 800 டன் எடை கொண்ட நவீன உலோகத்தால் ஆன ‘வி’ வடிவ பகுதி கடலில் 100 மீட்டர் அளவிற்கு சுமார் 4 மீட்டர் ஆழத்தில் நிறுவப்பட்டு திட்டம் நிறைவுபெற்றது. தற்போது இந்த பகுதியில் செயற்கை மணல் பரப்பு உருவாகி உள்ளது. இதேபோல் தெற்கு பகுதியில் சுமார் 600 மீட்டர் அளவுக்கு மணல் பரப்பு உருவாகி உள்ளது.

இந்தநிலையில் புதுவையில் உள்ள தனியார் ஓட்டலில் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மத்திய நில அறிவியல் அமைச்சகம் சார்பில் நேற்று செயற்கை மணல் பரப்பு திட்ட விழா கொண்டாடப்பட்டது.

விழாவை புதுவை கவர்னர் கிரண்பெடி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘புதுவை கடற்கரை வடக்குப் பகுதியில் செயற்கை மணல் பரப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. இதேபோல் தெற்குப் பகுதியில் பணி முழுமையாக நிறைவேற வேண்டும். இதற்கான நடவடிக்கையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். எனவே தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் மத்திய அரசிடம் தெரிவித்து நிதியை பெற்று தெற்கு பகுதி பணியை விரைவில் முடிக்க வேண்டும்’ என்றார்.

இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., புதுவை தலைமை செயலர் அஸ்வனி குமார் மற்றும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் ஆத்மானந்த், திட்ட இயக்குனர் ராமமூர்த்தி, மத்திய நில அறிவியல் அமைச்சகத்தின் செயலர் சைலேஸ் நாயக் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதில் செயற்கை மணல் பரப்பு உருவாக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த அனைத்து தகவல்கள் குறித்து விளக்கப்படம் காண்பிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்