காதல் கணவருடன் தகராறு: 5 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

ஆத்தூர் அருகே காதல் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 5 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-10-12 22:30 GMT
பெத்தநாயக்கன்பாளையம்,

ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் 11-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் அதே பகுதியை சேர்ந்த காவியா(வயது 18) என்பவரை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு வசந்தகுமார், தனது மனைவி காவியா மற்றும் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

தற்போது காவியா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் தூங்கி விட்டனர்.

நள்ளிரவில் 1 மணி அளவில் காவியாவின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டனர். காவியா சேலையில் தூக்கிட்டதால் துடித்து கொண்டு இருந்தார். உடனே அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் காவியா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது கணவர் வசந்தகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்