காட்டுமன்னார்கோவில் அருகே: மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி சாவு

காட்டுமன்னார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுமி உயிரிழந்தார்.

Update: 2018-10-12 22:45 GMT
காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கந்தகுமாரன் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூத்தி(வயது 40). இவருடைய மனைவி பவானி. இவர்களுடைய மகள் நேசிகா(5). சுந்தரமூர்த்தி கேரளாவில் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று பவானி தனது மகள் நேசிகாவுடன் வீராணம் ஏரியில் குளித்து விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது சேத்தியாத்தோப்பு பகுதியில் இருந்து காட்டுமன்னார்கோவில் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று நேசிகா மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் நேசிகா பலத்த காயமடைந்தாள். உடனே அவளை, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவள் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் நேசிகா பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்த புகாரின்பேரில் புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்