கடன் தருவதாக கூறி உருளைகிழங்கு மண்டி வியாபாரியிடம் ரூ.15 லட்சம் மோசடி பெண் உள்பட 7 பேர் கைது

கடன் தருவதாக கூறி உருளைகிழங்கு மண்டி வியாபாரியிடம் ரூ.15½ லட்சத்தை மோசடி செய்த பெண் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-13 23:00 GMT
திருச்சி,

திருச்சி காந்திமார்க்கெட் மணிமண்டபசாலையில் உருளைகிழங்கு மண்டி வைத்து மொத்த வியாபாரம் செய்பவர் முருகப்ப செட்டியார். இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், “கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி என்னை செல்போனில் ஒரு பெண் தொடர்பு கொண்டார். அந்த பெண் தனது பெயர் நிஷா என்றும், தனியார் நிதி நிறுவன மேலாளராக இருப்பதாகவும் அறிமுகம் செய்து கொண்டார்.

பின்னர் தங்களது நிதி நிறுவனத்தில் ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடன் தருவதாகவும், அதற்கு உங்களுடைய வங்கி கணக்கு எண் மற்றும் ஏ.டி.எம். கார்டு எண்ணை கொடுக்கும்படி கேட்டார். நானும் அந்த எண்களை கொடுத்தேன். சிறிதுநேரத்தில் எங்களது நிறுவனத்தில் இருந்து உங்கள் செல்போனுக்கு ஓ.டி.பி. எண் வரும். அதனையும் கூறியபிறகு கடன் சம்பந்தமாக பரிசீலிக்கப்படும் என்றார். அதன்படி நானும் அனைத்து தகவல்களையும் கொடுத்தேன்.

பின்னர் அதே நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்று 7 பேர் என்னை பலமுறை தொடர்பு கொண்டு அவ்வப்போது ஓ.டி.பி.எண்ணை கேட்டனர். நானும் கொடுத்தேன். ஆனால் அவர்கள் கூறியபடி எனக்கு கடன் எதுவும் கொடுக்கவில்லை. மாறாக, கடந்த 10-ந் தேதி வரை எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் எடுக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக நிஷா என்ற பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அது தங்களது நிறுவனம் கடன் கொடுப்பதற்கான பரிசீலனை தொகை என்றும், விரைவில் ரூ.50 லட்சம் கடன் தருவதாகவும் கூறினார். அதன்பிறகு மேலும் 2 மாதங்கள் கழிந்தபிறகும் கடன் கொடுக்கவில்லை. அப்போது தான் என்னை மோசடி செய்தது தெரியவந்தது. ஆகவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறி இருந்தார். இந்த மோசடி குறித்து சைபர்கிரைம் போலீசாரின் உதவியுடன் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து சைபர்கிரைம் போலீசார் முதற்கட்டமாக நிஷா என்ற பெண் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் சென்னை கே.கே.நகர் அம்பேத்கார் காலனியை சேர்ந்த அனுஷா(வயது 25) என்பதும், இந்த மோசடியில் மேலும் 6 பேர் ஈடுபட்டதும் தெரியவந்தது.

உடனே தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று மோசடியில் ஈடுபட்ட சென்னை நய்னியப்பன்தெருவை சேர்ந்த முகமதுஜாவீத்(29), வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையை சேர்ந்த சதீஷ்குமார்(30), காஞ்சீபுரம் செய்யூர் சீக்கினான் குப்பத்தை சேர்ந்த கார்த்திக்(24), சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த விக்கி நிகேதன்(28), காஞ்சீபுரம் தாழம்பூர் கூட்டுரோடை சேர்ந்த முத்துக்குமார்(28), காஞ்சீபுரம் காரப்பாக்கத்தை சேர்ந்த சிலம்பரசன்(22) ஆகியோரை பிடித்து வந்தனர்.

இவர்கள் 7 பேரும் கூட்டாக சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து, 7 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 900, மடிக்கணினி 2, செல்போன் 11, ஏ.டி.எம். கார்டு 20 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்