குள்ளஞ்சாவடியில் மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதல்; வாலிபர் பலி

குள்ளஞ்சாவடியில் மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-10-14 21:45 GMT
குறிஞ்சிப்பாடி, 

கடலூர் அடுத்த குடிகாடு லாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ரஞ்சித்குமார் (வயது 22). இவர் குள்ளஞ்சாவடியில் உள்ள மளிகை கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் குள்ளஞ்சாவடியில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

விருத்தாசலம்-கடலூர் சாலையில் குள்ளஞ்சாவடியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்த போது கடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடி நோக்கி சென்ற சரக்கு வாகனம் ஒன்று ரஞ்சித்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரஞ்சித்குமாரின் அண்ணன் பாலசுப்பிரமணியன், குள்ளஞ்சாவடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்