அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் உண்ணாவிரதம்

கிருஷ்ணகிரியில், சேலம் மண்டல தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.

Update: 2018-10-14 22:30 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில், சேலம் மண்டல தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு சேலம் மண்டல தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சிவப்பிரியா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் பெருமாள் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் மாநில துணைத்தலைவர் மாது, அய்பெக்டோ துணைத்தலைவர் ரவி, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில தலைவர் ஹரிராவ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தணிக்கையாளர் நடராஜன், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சேலம் மண்டல இணை செயலாளர் சர்மிளாபானு, மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். போராட்டத்தின் போது, கிராமப்புற கல்லூரிகளின் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க விரைவில் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். தர ஊதியம் வழங்கியதிலுள்ள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் சேலம் மண்டலத்திற்குட்பட்ட பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், காரிமங்கலம், பாலக்கோடு, தர்மபுரி, சேலம், குமாரபாளையம், நாமக்கல், ஆத்தூர், ராசிபுரம் ஆகிய இடங்களில் உள்ள 15 கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சேலம் மண்டல பொருளாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்