மரத்தின் மீது மோதி விபத்து: லாரியில் சிக்கி டிரைவர் படுகாயம் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஒரத்தநாடு அருகே மரத்தில் லாரி மோதியது. இதில் லாரியில் சிக்கி படுகாயம் அடைந்த டிரைவரை மீட்கும் பணியால் 3 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-10-15 22:45 GMT
ஒரத்தநாடு,

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த செண்பரைபட்டியை சேர்ந்தவர் கண்ணுச்சாமி. இவருடைய மகன் பாலசுப்பிரமணி (வயது 21). இவர் கரூரில் இருந்து டிப்பர் லாரியில் ஜல்லி ஏற்றிக்கொண்டு மன்னார்குடிக்கு சென்றார். பின்னர் அங்கியிருந்து கரூருக்கு புறப்பட்டார். நேற்று அதிகாலை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள பனையக்கோட்டை அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது லாரி மோதியது. இதில் லாரியின் முன்பகுதி சேதமடைந்து மரத்தில் சிக்கி கொண்டது.

இந்த விபத்தில் டிரைவர் பாலசுப்பிரமணி படுகாய மடைந்து லாரிக்குள் சிக்கி கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு படையினரின் உதவியுடன் பாலசுப்பிரமணியனை லாரியில் இருந்து மீட்டனர். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தஞ்சை- மன்னார்குடி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. இச்சம்பவம் குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்