பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கான குழுப்போட்டிகள்

பெரம்பலூரில் மண்டல அளவில் பள்ளி மாணவர்களுக்கான குழுப்போட்டிகள் நடந்தது.

Update: 2018-10-17 22:45 GMT
பெரம்பலூர்,

பள்ளி கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் பெரம்பலூர் மண்டல அளவில் 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் அணிகளுக்கான குழு போட்டிகள் பெரம்பலூரில் நேற்று நடந்தது. ஏற்கனவே மாவட்ட அளவில் நடைபெற்ற குழுப்போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்த பெரம்பலூர், அரியலூர், உடையார்பாளையம், கரூர் ஆகிய கல்வி மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளின் அணிகள் கலந்து கொண்டு விளையாடின. கால்பந்து, கோ-கோ, இறகுப்பந்து ஆகிய போட்டிகள் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

கூடைப்பந்து, டென்னிஸ், மேஜை பந்தாட்டம் ஆகிய போட்டிகள் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. வாலிபால், பூப்பந்தாட்டம், கபடி ஆகிய போட்டிகள் பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரியில் நடந்தது. ஹேண்ட் பால், எறிப்பந்து ஆகிய போட்டிகள் லெப்பைக்குடிக்காடு விஸ்டம் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகளின் வீரர்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மண்டல அளவிலான குழுப்போட்டிகளில் முதல் இடம் பிடித்த அணிகள் இந்த மாதம் இறுதியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான குழுப்போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்