தர்மபுரியில் ரேஷன் கடை பணியாளர்கள் மறியல் ; 62 பேர் கைது

தர்மபுரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ரேஷன்கடை பணியாளர்கள் 62 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-17 21:30 GMT
தர்மபுரி,

தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் கணிசமான அளவில் ரேஷன்கடைகள் மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் ரேஷன்கடை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் சுகமதி மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். சங்க மாவட்ட பொருளாளர் ஜான்ஜோசப், மாவட்ட செயலாளர் மனோகரன் உள்பட சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

நுகர்பொருட்கள் வினியோகத்திற்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். ரேஷன்கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தை ரேஷன்கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து அங்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 62 பேரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்