குருபரப்பள்ளி அருகே ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் வாலிபர் கைது

குருபரப்பள்ளி அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.

Update: 2018-10-21 22:15 GMT
குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர். சோமநாதபுரம் பகுதியில் உள்ள தாபா ஓட்டல் எதிரே சந்தேகத்திற்கு கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி வேனை சோதனை செய்தனர்.

இதில், 264 பைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மினி வேனை ஓட்டி வந்த, சேலம் குகை பகுதியை சேர்ந்த விவேக் (வயது 23) என்பவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

வாலிபர் கைது

இது தொடர்பாக விவேக் மற்றும் மினி வேனின் உரிமையாளரான ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த விஜயாமங்கலத்தை சேர்ந்த துரைசிங்(47) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விவேக்கை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மினி வேனை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்