மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு

மனைவியை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2018-10-25 22:00 GMT
சேலம், 


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கோணசெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 40), கல் உடைக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி சுமதி(37). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஜெயராமனுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனிடையே, வீடு கட்டுவதற்காக ஜெயராமன் தெரிந்தவர்களிடம் ரூ.2 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார். இந்த பணத்தை தனது மனைவி குடும்பத்தினரிடம் வாங்கி வருமாறு, சுமதியை துன்புறுத்தி உள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ஜெயராமன் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி வீட்டில் இருந்த மனைவி சுமதியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதனை குழந்தைகள் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெயராமனை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதில், மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு அளித்தார்.

மேலும் செய்திகள்