காஞ்சீபுரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றாத டாஸ்மாக் கடைக்கு சீல்

காஞ்சீபுரத்தில், டாஸ்மாக் பார் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2018-10-26 22:15 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பருவ காலங்களில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று காஞ்சீபுரத்தில் டெங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது காஞ்சீபுரம் ரெட்டிபேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பிளாஸ் டிக் கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கி கிடந்தது. இதையடுத்து அந்த டாஸ்மாக் கடைக்கு ‘சீல்’ வைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி அந்த டாஸ்மாக் கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

இந்தநிலையில், அந்த டாஸ்மாக் கடையின் பாரை காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் அ.சர்தார், நகர்நல அலுவலர் டாக்டர் பி.முத்து, சுகாதாரத்துறை ஆய்வாளர் எம்.ஏ. முகமது இக்பால் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது சுகாதாரமற்ற முறையில் பார் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து பார் உரிமையாளர் காஞ்சீபுரம் ரெட்டிபேட்டை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 42) என்பவருக்கு, ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். இதற்கான நோட்டீஸ் அவருக்கு அனுப்பப்பட்டதாக சுகாதாரத்துறை ஆய்வாளர் முகமது இக்பால் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்