வேதாரண்யம் அருகே மின் கம்பத்தில் கார் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி

வேதாரண்யம் அருகே மின்கம்பத்தில் கார் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.

Update: 2018-10-27 22:30 GMT
வேதாரண்யம் அருகே செட்டிப்புலம் கிராமம் தெற்குகாடு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் ராஜேஷ் (வயது18). இவர் வேதாரண்யம் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் ராஜேஷ் உறவினர்கள் 2 பேருடன் காரில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் ராகவன் என்பவர் ஓட்டிவந்தார். அப்போது கரியாப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி மெயின்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் மின்கம்பத்தில் மோதியது. அதில் படுகாயம் அடைந்த ராஜேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் காரில் சென்ற ராஜேசின் உறவினர்கள் 2 பேருக்கும் சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்